உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
9 வியாழன்

முல்லைத்தீவு விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய அமைப்புக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆகியோரின் தேவைகள், பிரச்சினைகள் தொடர்பில் விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ண கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் (04) பி.ப 2.30 மணிக்கு நடைபெற்றது.

இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் வனவள திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணி பிரச்சினை தொடர்பிலும், வன விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புக்கள், குளங்கள் கால்வாய்கள் புனரமைப்பு, பாதைகள் நிர்மாணிப்பின் தேவைகள் தொடர்பிலும், காணி விடுவித்தல், நவீன விவசாயமுறை, தானிய உற்பத்தி, சந்தைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளல், மேய்ச்சல்தரையின் தேவை, நெல் கொள்வனவு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.ஜெயக்காந் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், மாவட்ட வனவள அதிகாரி, விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
Thinakaran