உள்ளடக்கத்திற்குச் செல்க

மாயமான வணிக வானூர்தியின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு!

பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் காணாமல் போன வணிக விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

காணாமல் போன ஐந்து விமானப் பணியாளர்களைத் தேடும் தீவிரப் பணி தொடர்கிறது.

புதன்கிழமை அன்று தெற்கில் உள்ள கராச்சி துறைமுகத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன அந்த விமானத்தின் உடைந்த பாகங்களை பொதுமக்கள் மற்றும் கடற்படைக் குழுக்கள் கண்டுபிடித்தன.


ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தை கே2 ஏர்வேஸ் என்ற தனியார் விமான நிறுவனம் இயக்கியது.

செவ்வாய்க்கிழமை (06) இரவு வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழப்பதற்கு முன்பு, அதன் வழிசெலுத்தல் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதாக அது தெரிவித்திருந்தது.

விமானங்கள் மற்றும் கப்பல்களைப் பயன்படுத்தி சுமார் 12 மணிநேரம் தேடிய பிறகு, அரபிக் கடலில் அந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையகம் ‘எக்ஸ்’ (X) தளத்தில் தெரிவித்துள்ளது.

கொந்தளிப்பான கடல் சூழலில் தேடுதல் பணியில் ஈடுபடுபவர்கள் எதிர்கொள்ளும் சவாலான நிலைமைகளைச் சுட்டிக்காட்டிய பாகிஸ்தானின் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஃபைசல் ஷா,சுமார் 3,000 மீட்டர் (9,800 அடி) ஆழத்தில் இருப்பதாகக் கருதப்படும் விமானத்தின் முக்கிய பாகத்தைக் கண்டறிவது மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும், அதற்குச் சிறப்பு உபகரணங்கள் தேவைப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
Thinakaran