உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
9 வியாழன்

அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றுங்கள்; சபாநாயகரிடம் கஜேந்திரகுமார் எம்.பி கோரிக்கை.!

நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரை எழுத்து மூலம் கோரியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,
உங்களுக்குத் தெரிந்தபடி, நாடாளுமன்றத்தில் எனக்கு இடதுபுறம் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களிலும், சமூக ஊடகங்களிலும், பொதுவெளியிலும் என்னைத் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியும், வன்முறை அச்சுறுத்தல் விடுத்தும், இழிவான சொற்களைப் பயன்படுத்தியும் வருகிறார்.

சமீப காலமாக இந்த நடத்தை எந்த அளவிற்கு மோசமடைந்துள்ளது என்றால், அது என் கவனத்தைச் சிதறடிப்பதால், நாடாளுமன்ற அவையில் அவரை எனக்கு அருகில் அமர வைப்பது எனக்கு இயலாத காரியமாகிவிட்டது.

குறிப்பிட்ட அந்த உறுப்பினர், ஒரு சுயேட்சைக் குழுவிலிருந்து முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

பொதுவாக, இத்தகைய உறுப்பினர்களுக்கு அனைத்து மூத்த தலைவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு இருக்கை வழங்கப்படும்.

இருப்பினும், வழக்கமான நடைமுறையை மீறி, குறிப்பிட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் இடையில் அமர அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்களுக்குப் பிறகு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களை அமர வைக்கும் வழக்கமான நடைமுறைக்கு இணங்க, குறிப்பிட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினரை என்னிடமிருந்து இடதுபுறமாக நகர்த்தும்படி கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
Thinakaran