வாசலிலே கிருசாந்தி!
எழுபது ஆண்டு கால தாகத்தில் எண்ணற்ற அழிவுகளும், சிதைவுகளும் தமிழினத்தின் மேல் இறங்கிக் கொண்டே இருக்கிறது. வெள்ளைக்காரர்களிடம் பெற்ற சுதந்திரம் தமிழர்களுக்கு மட்டும் நஞ்சாக மாறியது ஏனோ.
மொழி, நிலம், வழிபாடு, வாழ்வியல் என எல்லாமே சூரையாடப்பட்டுக்கொண்டே இருந்தது, இன்றும் இருக்கிறது. சொல்லமுடியாத அடக்குமுறைகளின் உச்சத்தில் ஒன்றே சகோதரி கிருசாந்தியின் கொலை. கொலை தொடர்பான சம்பவங்களை அறியும் பொழுது மனது சுக்குநூறாக நொறுங்குகின்றது.
சகோதரி கிருசாந்தி போல் எண்ணற்ற கிருசாந்திகள் இந்த மண் மீது சூறையாடி புதைக்கப்பட்டுள்ளார்கள்.
மனித குலத்துக்கே செய்யவே முடியாத – ஜீரணிக்க முடியாத பெரும் கொடுமைகளை தமிழ் பிள்ளைகளும், பெண்களும், ஆண்களும் இந்த நிலத்தில் (இலங்கை) அனுபவித்துள்ளார்கள். இந்த நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சியும், ஆட்சியாளர்களின் மனநிலையும் ஒருபோதும் மாறவில்லை.
திட்டமிட்ட இன அழிப்பையும், சிங்கள பரவலாக்கலையும் எந்தவிதமான குற்ற உணர்வும் இன்றி குறுகிய காலத்திலும் செய்யும் சூச்சுமம் ஆட்சியாளர்களின் தன்மைகளில் ஊறிக்கிடக்கிறது.
வாழப் பிறந்த மழலைகளையும், ஓங்கி வளரும் செடிகளையும் கசக்கிப் போட்ட பேரினவாத சிந்தனை என்றும் வருந்தாது. வாழ்வதற்கே இங்கு போராட வேண்டிய பெரும் கட்டாயம் தமிழ் பிள்ளைகளின் கைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கொன்றொழிக்கப்பட்ட எங்களின் வாக்குமூலத்தில் இருந்தே எமக்கான ஜனநாயக போராட்டத்தையும், நீதிக்கான போராட்டத்தையும் தொடர வேண்டும்.
உண்மையான தமிழரின் கண்களில் வழியும் நீரை எண்ணற்ற கவிதைகள் கரங்களாக சேர்ந்து துடைப்பதாக அமைகிறது. அன்பும், கவலையும், கோபமும், தமிழும் கலந்து பீச்சுவதாக இருக்கிறது இக்கவிதை நூல். தமிழினத்தில் அக்கறை கொண்ட பல கவிஞர்களின் கூட்டு முயற்சியாக இதனை உணரலாம். செம்மணியின் ஓலம் அறிய இந்நூலும் பயன்படட்டும்.
நூல் :- வாசலிலே கிருசாந்தி
எழுத்தாளர் :- எழுநா கலை பண்பாட்டு மையம்
விலை :- 500 ரூபா.
விமர்சகர்
எழுத்தாளர்
ஆதன் குணா

